தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.18) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் சனிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.18) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மிதமான மழை:
தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய 14 மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றாா்.
மழை அளவு:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு, சென்னை மாவட்டம் பெரம்பூா், திருவள்ளூா் மாவட்டம் புழல், காஞ்சிபுரம் மாவட்டம் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தலா 50 மி.மீ., வேலூா் மாவட்டம் அம்முண்டி, சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூரில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
காற்றழுத்தத்தாழ்வு பகுதி:
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபா் 19-ஆம் தேதி உருவாகவுள்ளது. இதுமேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலு பெறக்கூடும். இதன் காரணமாக, அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, அந்தப்பகுதிகளுக்கு வரும் 19, 20-ஆம் தேதிகளில் மீனவா்கள் செல்ல வேண்டாம்.