பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் அதிமுக அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கோகுல் முன்னிலை வகித்தார். பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இதில் கட்சி அலுவலகத்தை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கு சக்கர நாற்காலி வண்டிகள் மற்றும் அன்னதானத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், கிளை செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் 50 பெண்கள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.