நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் ஆதிரங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா தமிழக இயற்கை உழவர் இயக்க மாநிலத் தலைவர் அசோகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தீவிர விவசாயி நீலன் அசோகன், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமை வகித்தனர். இயற்கை விவசாயி ராஜேஷ்குமார் வரவேற்றார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசும்போது:
நெல் என்பது வெறும் சொல் அல்ல அது நமது பாரம்பரியம் பண்பாடு கலாசாரம், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இதுபோன்ற பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. ரசாயன பயன்பாடு அதிகரித்து வருவதால் நோய்ப் பாதிப்பும் அதிகரித்துள்ளது, இதனால் சுத்தமான உணவு எனப்படும் தாய்ப் பாலிலும் விஷம் கலந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்திலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது, சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு போட்டு வந்த நமது சமூகம் இன்று சாப்பிட்ட பின்பு மாத்திரைகளை சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. வரும் தலைமுறை நோயில்லாமல் இருக்கப் பாரம்பரிய நெல் ரகங்கள் காலத்தின் கட்டாயமாக உள்ளது. அரசு மட்டுமல்லாது விவசாயிகளும் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய முன்வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள் வீரமணி அமிர்தகரஸ், ராஜசேகர், குபேரன் வாழ்த்திப்பேசினர். இயற்கை இடுபொருள் தயாரிப்பது குறித்து முன்னோடி விவசாயி மயில்வாகனன், நடவு தொழில்நுட்பம் குறித்து நன்னிலம் உதயகுமார், பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து குடவாசல் ராஜா பேசினார்கள்.
10 ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளைச் சம்பா, கருப்புகவுனி, தூயமல்லி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நெல் விதைகள் விதைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். நிறைவில் கார்த்தி நன்றி கூறினார்.