தமிழக மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: முதல்வர் பழனிசாமி
சென்னை: தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்.. 1,72,000 ஆண்டுகளுக்கு முன்.. தார் பாலைவனத்தில் ஓடிய ஆறு
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில், 2015-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தற்போது விராலிமலையில் ரூ. 1,150 கோடியில் உணவு உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு பகுதி வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும்.
அதன்பிறகு 2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 211 தொழில்களுக்கு ரூ.303 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவற்றில் 184 திட்டங்கள் ரூ. 197 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைத்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. பிகார் தேர்தலில் வென்றால் இலவச கரோனா தடுப்பூசி: பாஜக வாக்குறுதி
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசைக் குறை கூற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பொய்ப் பிரசாரத்தை ஊடகங்கள் வாயிலாக செய்து வருகிறார்.
குடிமராமத்துத் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நிகழாண்டில் 38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் ஏற்கெனவே ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. தீபாவளி கங்கா ஸ்நானம் யாத்திரை ரயில் - ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு
தற்போது புதுக்கோட்டையில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். அக்கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.