தீபாவளி: தி.நகர், புரசைவாக்கத்துக்கு 50 சிறப்புப் பேருந்துகள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாள்களில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 14.11.2020 அன்று கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை வாழ் மக்கள் தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்குச் சென்று பொருள்களை வாங்கிட ஏதுவாக, வார இறுதி நாள்களான (சனி மற்றும் ஞாயிறு) 24.10.2020 முதல் 26.10.2020 வரை, 31.10.2020, 01.11.2020 மற்றும் 07.11.2020, 08.11.2020 உள்ளிட்ட ஏழு நாள்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 25 வழித்தடங்களில், 50 கூடுதல் சிறப்புப் பேருயதுகள் அட்டவணையில் உள்ளவாறு இயக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் இப்பேருந்துகளை எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் "தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.