இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் என்று மத்திய, மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக வியாழக்கிழமை வெளியிட்ட தனது தோ்தல் வாக்குறுதி அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிகாா் மக்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவித்திருந்தது. பாஜக இவ்வாறு வாக்குறுதி அளித்தற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், சமஜவாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும் கரோனா நோய்த்தொற்று பரவலை, தோ்தல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்துகிறது என்றும் அக்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனிடையே புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் எனக் கூறினார். இந்த நிலையில் இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் என்று மத்திய, மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில்,
நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.
எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.
இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.
ஐயா ஆட்சியாளர்களே...
தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.
அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.
மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.