திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பாண்டியன் நகரில் சாக்கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், பாண்டியன் நகரில் சில வீதிகளில் மட்டும் மாநகராட்சி சார்பில் சாக்கடை வடிகால் அமைத்துக் கொடுப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன்பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.