அவிநாசி: சேவூர் அருகே அதிவேகமாகச் சென்ற பனியன் நிறுவன வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு 15 பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பனியன் நிறுவன வேனில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அவிநாசி - சேவூர் சாலை கருமாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வேனில் புதுப்பிக்கப்பட்டுப் பின்புறம் இடதுபுறம் பொருத்தியிருந்த டயர் வெடித்ததில் வேன் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் எதிர்த்திசையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சேவூர் காவல்நிலை காவலர்களும் பொதுமக்களும் சேர்ந்து காயமடைந்த நிலையில் வேனிற்குள் இருந்த தொழலாளர்களை மீட்டு 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பூர், அவிநாசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சேவூர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவிநாசி - சேவூர் சாலையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன வாகனங்கள் தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு, அதிகவேகமாக ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வந்து, செல்வதால் அடிக்கடி பெரும் விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
இதையும் படிக்கலாமே.. இறந்த கரோனா நோயாளிக்கு முதல் முறையாக உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி
தற்போது டயர் வெடித்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேனில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பழைய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் உயிர்களோடு பனியன் நிறுவனங்கள் விளையாடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நாள்தோறும் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்துடன் செல்லும் பனியன் நிறுவன வாகனங்களுக்கு உரிய அபராதம் விதித்து உரிமங்களை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனியன் நிறுவன வேனில் பொருத்தியிருந்த புதுப்பிக்கப்பட்ட பழைய டயர்.
அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு: எப்போது எதிர்த்திசையிலேயே போட்டி போடும் பனியன் நிறுவன வாகனங்கள் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில், இடதுபுறமாக வந்த வேன் வலதுபுற சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வலதுபுற திசையில் எவ்வித வாகனமும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்தும் உயிரிழப்பும் நடைபெறாமல் தப்பியது.