மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் நண்பரும், எழுத்தாளருமான கே.எஸ். சுப்ரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
கே.எஸ்.சுப்ரமணியன், எழுத்தாளர் ஜெயகாந்தனின் உற்ற நண்பர். அவரது பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தனக்கும், ஜெயகாந்தனுக்குமான நீண்ட கால இடையறாத நட்பே, ஜெயகாந்தன் பற்றி எழுதவும், கருத்துத் தெரிவிக்கவும் தனது தகுதியாய் அமைந்தது என்று தன்னடக்கத்துடன் கூறிக் கொண்டவர். சங்க காலக் கவிதைகள், புதுக்கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
சமீபத்தில் கரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'Lockdown Poems' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.
மேலும், இவர் ஏசியன் டெவல்ப்மென்ட் வங்கியில் பணிபுரிந்துள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றவர்.
இவரது மனைவி வசந்தி சுப்ரமணியன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக விசிக சார்பில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டவர்.
அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.