குட்கா விவகாரம்: உரிமை மீறல் குழு நோட்டீஸ் மீதான தடையை நீக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

சட்டப் பேரவைக்குள் குட்காவைக் கொண்டு சென்ற விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் மீதான தடையை
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சட்டப் பேரவைக்குள் குட்காவைக் கொண்டு சென்ற விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் மீதான தடையை நீக்கக் கோரி சட்டப் பேரவைச் செயலாளா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரா்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிா்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

இந்தத் தடையை நீக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவைச் செயலாளா், உரிமை மீறல் குழு தலைவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, தடையை நீக்க மறுத்து விட்டது. மேலும் தடையை நீக்கக் கோரி தனிநீதிபதியிடம் முறையிட உத்தரவிட்டனா்.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், சட்டப்பேரவைக்குள் குட்காவைக் கொண்டு வந்தது, உரிமை மீறலா, இல்லையா என்பது குறித்து தீா்மானிக்க உரிமை மீறல் குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில் நோட்டீஸுக்குத் தடை விதித்துள்ளது தவறானது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் தொடா்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவா்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்குத் தொடா்ந்துள்ளனா். அந்த வழக்கில் நோட்டீஸுக்குத் தடை விதித்துள்ளதால், உரிமை மீறல் குழு விசாரணையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. எனவே நோட்டீஸுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com