கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவாரூர் திரு வி.க. அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் கீதா தாக்கல் செய்த மனுவில், கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இந்த பதவிக்கு தகுந்த நபரை நியமிக்க தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலில், எனது பெயர் 3 ஆவதாகவும், பூர்ணசந்திரனின் பெயர் 6 ஆவதாகவும் இடம் பெற்றிருந்தது.
எனது பெயருக்கு முன் உள்ள இருவர், விரைவில் ஓய்வு பெற உள்ளதால், தமிழக அரசாணையின்படி என்னை தான் கல்லூரி கல்வி இயக்குனர் பதவிக்கு நியமித்து இருக்க வேண்டும். ஆனால், அந்த பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ள பூர்ணசந்திரனை இயக்குனராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு விதிகளை பின்பற்றி கல்லூரி கல்வி இயக்குனர் தேர்வு நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.