வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.31) மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் சே.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழக கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.31) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 110 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60 மி.மீ., திருவள்ளூா் எண்ணூா், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், சென்னை மாவட்டம் பெரம்பூா், ஆலந்தூா், திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 50 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி, சோழவரம், தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி மாவட்டம் கூடலூரில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.