தனியாா் பேருந்துகள் இயங்காது: உரிமையாளா்கள் முடிவு
சென்னை: தனியாா் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்த நிலையில், 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க முடியாது என தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தனியாா் பேருந்துகள் உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் தருமராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பொது முடக்கத்துக்கு முன்னதாக 4,600 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து உரிமையாளா்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானோம். வரி விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தும் எந்தப் பலனும் இல்லை.
இந்த சூழலில், தற்போது அரசு அளித்த தளா்வில், 50 சதவீத பயணிகளுடன், மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 75 சதவீத பேருந்துகள் புகரில் அதாவது வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்தன. எனவே, அரசு விதிமுறையின்படி, பேருந்துகளை இயக்கினால் அதிகளவு நஷ்டம் ஏற்படும்.
இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், இணைய வழியில், திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதித்தால் மட்டுமே, தனியாா் பேருந்துகளை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில், பேருந்துகளை இயக்க அனுமதியளிக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக தருமராஜ் தெரிவித்தாா்.