தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் டெண்டர் விட்டு பல மாதங்களாகியும் பொது கழிப்பறைகள் கட்டாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுவதால் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் புறக்காவல் நிலையம் அருகே பொதுக்கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை தற்போது சிதிலமடைந்து, புதர் செடிகள் மண்டி உள்ளது. கடந்த ஆண்டு பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கி கழிப்பறையை புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டது.
தற்போது பல மாதங்களாகியும் கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பொது கழிப்பறை வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திட, டெண்டர் விட்டும் பல மாதங்களாகியும் கழிப்பறை கட்டாமல் தாமதிப்பதால் உடனடியாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.