சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 1,20,820 பேர் (88%) குணமடைந்துள்ளனர். 13,107 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களோடு தகவலை வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,36,697 ஆக உள்ளது. இவர்களில் 1,20,820 பேர் குணமடைந்துள்ளனர். 2,770 பேர் உயிரிழந்துவிட்டனர். 13,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,520 பேரும், கோடம்பாக்கத்தில் 1415 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
இதைத் தவிர, அடையாறு, அம்பத்தூர் ஆகிய இரண்டு மண்டலங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். மற்ற மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையிலேயே கோடம்பாக்கத்தில் 13,820 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 387 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.