"டெட்' தேர்ச்சியடைந்து  ஏழு ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் ("டெட்')  தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் புதிதாகத்தான் தேர்வெழுத வேண்டும்
"டெட்' தேர்ச்சியடைந்து  ஏழு ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்


சென்னை:  ஆசிரியர் தகுதித் தேர்வில் ("டெட்')  தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் புதிதாகத்தான் தேர்வெழுத வேண்டும் என  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொது முடக்கத்துக்குப் பின்னர், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 785 நூலகங்கள் செவ்வாய்க்கிழமை  திறக்கப்பட்டுள்ளன.  சென்னை கோட்டூர்புரத்தில்  திறக்கப்பட்ட அண்ணா  நூற்றாண்டு நூலகத்தை  அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளைச் சந்திக்க அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்று மாணவர்கள், தேர்வர்கள் படிக்கலாம். புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 

கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து கல்வித்துறைக்கு பெற்றோர் தகவல் கொடுத்தால், உடனடியாக அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில பள்ளிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்றன. நீதிமன்றம் அளிக்கும் உத்தரவு அடிப்படையில் கல்வித்துறை பணிகளை மேற்கொள்ளும். 

பள்ளிகள் திறப்பு பற்றி இப்போது யோசிக்கும் நிலை இல்லை. இந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டுதான் இருக்கும். அதன்பிறகு கரோனா தொற்று தாக்கத்தைப் பொறுத்துதான் முதல்வர் முடிவுகளை மேற்கொள்வார் என்றார். 

இதைத் தொடர்ந்து "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 80 ஆயிரம் பேரின் தேர்ச்சி சான்றிதழ் காலம் டிசம்பருடன் முடிவடையும் நிலையில், அதற்கு கால நீட்டிப்பு செய்ய வாய்ப்பு உள்ளதா' என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது,  "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது. எனவே அவர்கள் மீண்டும் புதிதாகத்தான் தகுதித்தேர்வை எழுதவேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com