கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு கொடைக்கானல் வெள்ளிநீர் அருவிப் பகுதியில் கரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் பயணிகள் கொடைக்கானலுக்கு அனுப்பப்படுகின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் மாணவ,மாணவிகள் கலந்து கொள்வதற்கும் பொது முடக்கத்தை சற்று தளர்த்தியது. மேலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பொது மக்கள் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் அதிக அளவு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, குற்றாலம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடு விதித்து இ- பாஸ் பெற்று செல்ல வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கொடைக்கானல் பகுதிக்கு பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் வெளி மாவட்ட பயணிகளுக்கு நகராட்சி எல்லையான வெள்ளி நீர் அருவிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கரோனா வைரஸ் தொற்று மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் பயணிகள் கொடைக்கானலுக்கு அனுப்பப்படுகின்றனர்.
சோதனைச் சாவடியில் மருத்துவத் துறை, வருவாயத் துறை, காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி முதல் பொது முடக்கம் முற்றிலும் தளர்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் இ-பாஸ் பெற்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.