ஈரோடு: மொடக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்த அரசு நகர பேருந்து லக்காபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் பேருந்தை அப்புறப்படுத்திய போது பேருந்தின் அடிப்பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த நான்கு பேர் சடலங்களும் பேருந்தின் அடியில் இருந்தது தெரிய வந்தது.
பேருந்துக்கு அடியில் கிடக்கும் இருசக்கர வாகனம்.
மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனிடையே ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் முதலுதவி சிகிச்சைக்காக பயணிகளையும் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே காவல்துறை முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. அதில் மொடக்குறிச்சி அருகே ஆளூத்துப்பாளையம், பரமசிவபுரத்தை சேர்ந்த மோகம்புரி(60), மனைவி மரகதம்(58), மாமியார் பாவையம்மாள்(80), மரகதம் சகோதரர் பாலசுப்பிரமணி(55) என்பதும் தெரியவந்துள்ளது.
பேருந்தில் பிரேக் செயல்படாததால் இந்த விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.
கரோனா பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து விபத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.