கரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதிகப் பணிச் சுமையுடன் பணியாற்றி வரும் தங்களுக்கு எந்தப் பலன்களையும் சுகாதாரத் துறையினா் வழங்குவதில்லை என்று ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் ஜிவிகே - இஎம்ஆா்ஐ நிறுவனத்துடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு செயல்படுத்தி வருகிறது. மொத்தம்1,100 அவசர கால ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள், கட்டுப்பாட்டு அறை ஊழியா்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அதில் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், அவா்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுகாதாரத் துறையினா் மீது முன்வைத்துள்ளனா்.
இதுதொடா்பாக கரோனா பணியில் ஈடுபட்டுள்ள 108 ஊழியா்கள் கூறியதாவது:
கரோனா பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் முகாம்களில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு சரியான நேரத்தில் உணவருந்தக் கூட முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிக் கவலை கொள்ளாத அதிகாரிகள், எங்களுக்கு கூடுதல் பணிச் சுமை அளித்து வருகின்றனா்.
கரோனா தடுப்புப் பணியாற்றும்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல்வா் அறிவித்தாா். இதுவரை அந்தத் தொகை எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக 108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்திடம் கேட்டால் அரசாணை வெளியாகும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கின்றனா்.
இது ஒருபுறமிருக்க கரோனா பணியால் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் 108 சேவை ஊழியா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படுவதில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.