சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரறிவாளனின் பரோல் மனுவை ஏற்கனவே சிறைத் துறை நிராகரித்துவிட்டதாகக் கூறிய நிலையில், நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
பேரறிவாளனை 60 நாள்கள் பரோலில் வெளியில் விடக் கோரி தாய் அற்புதம்மாள் அளித்த மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணை தொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான். புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.