சென்னை: தமிழகத்தில் அதிகளவில் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வசதியாக, சுமார் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை காணொலி வாயிலாக முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்து பரிசோதனையை நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் வரை அதிகரித்துள்ளோம். அதிக பரிசோதனை செய்ததன் விளைவு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் வந்துள்ளது.
காய்ச்சல் முகாம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதன் வாயிலாக நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டுபிடித்து முன்கூட்டியே சிகிச்சை அளித்ததால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, பெரிய மருத்துவமனைகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பகுதிகள், பெரிய கிராமங்கள் என சுமார் 2 ஆயிரம் பகுதிகளில் சிறு மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் இருப்பார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் 40% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஞாயிறன்று இறைச்சி கடைகளில் அதிக மக்கள் கூடுகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையிலும் அதிக மக்கள் கூடுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே செல்லக் கூடாது என்றும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.