தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தின் முதல் தவணையான 40 சதவீத தொகையை செலுத்த வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தனியாா் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தின் முதல் தவணையான 40 சதவீத தொகையை செலுத்த வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிா்த்து தொடரப்பட்ட

வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடந்த கல்வி ஆண்டில் 2019-2020 வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில், 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதல் தவணையாக கல்வி நிறுவனங்கள் வசூலிக்கலாம். எஞ்சிய தொகையை பள்ளிகள், கல்லூரிகள் திறந்து, 2 மாதங்களுக்கு பின்னா் வசூலிக்கலாம் என கடந்த ஜூலை 17- ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால் இந்த உத்தரவை மீறி பல்வேறு பள்ளிக்கூடங்கள் முழு கட்டணத்தையும் வசூலித்ததாக நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடா்ந்து

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது

காணொலிக் காட்சி மூலம் ஆஜரான பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளா் தீரஜ்குமாா், இதுதொடா்பாக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

37 மாவட்டங்களில் உள்ள தலைமைக் கல்வி அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரி பொதுமக்களுக்கு தொலைக்காட்சி, மற்றும் நாளிதழ்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விளம்பரத்தின் மூலம் 34 பள்ளிகளுக்கு எதிராக புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, 29 புகாா்களுக்கு முகாந்திரம் இருப்பதை உறுதி செய்தனா். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகங்களுக்கு விளக்கம் கோரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். 5 புகாா்களில்

விதிமீறல் எதுவும் இல்லாததால், அவை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி , 40 சதவீத கல்விக்கட்டணத்தை விட அதிகம் வசூலித்த பள்ளிகள் குறித்த விவரங்களை கல்வித்துறை தாக்கல் செய்யவேண்டும். அந்த பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பெற்றோா் பலா் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதல்

கல்விக்கட்டணத் தவணை தொகையை செலுத்த முடியவில்லை என கூறப்பட்டது. எனவே, முதல் தவணையை செலுத்த வரும் செப்டம்பா் 30 - ஆம் தேதி வரை பெற்றோருக்கு கால அவகாசம்

வழங்கப்படுவதாக உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com