புகழ்பெற்ற எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான கலைமாமணி டாக்டர் பட்டுக்கோட்டை குமாரவேல் காலமானார். அவருக்கு வயது 96.
தஞ்சையைச் சேர்ந்த பட்டுக்கோட்டை குமாரவேல், வானொலிக்காக 2,000 நாடகங்களுக்கும் மேல் எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
ஒளிநெறிப் பயிற்சியில் வாழ்நாள் முழுமையும் ஒழுகியவர். இப்பயிற்சியினை நன்கு கற்றறிந்ததோடு, வளரும் தலைமுறையினர் பலருக்கும் பயிற்சியளித்தவர். "ஒளி நெறியும் உயிர் வாழ்வும்" என்ற இவரது நூல் ஒளிநெறிப் பயிற்சியாளர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி.
இவருடைய நாடகங்களில் அறிவுப் பேரொளி புத்தர், சிலுவை நாயகன், திருஅருட்பிரகாசர், இராமானுசர் (இந்நாடக நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தமிழ் மாணவர்களுக்கு பாடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது) போன்றவை புகழ்பெற்றவை.
உடல் நலக் குறைவு காரணமாக குமாரவேல், சென்னை திருவான்மியூரில் அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை (செப். 8) மாலையில் காலமானார். இறுதிச்சடங்குகள், இன்று புதன்கிழமை (செப். 9) பகல் 3 மணியளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறுகிறது.