சென்னை: தமிழகத்தில் சேலம், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில், வியாழக்கிழமை, கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், வியாழக்கிழமை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
கன மழை: சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
மழை அளவு: தமிழகத்தில், புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் வத்தளை அணையில் 140 மி.மீ, நீலகிரி மாவட்டம், தேவலா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருச்சி மாவட்டம் சமயபுரம், முசிறி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தலா 60 மி.மீ மழை, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தலா 50 மி.மீ மழை பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு அரபிக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், வியாழன் (செப்.10), வெள்ளி (செப்.11) ஆகிய நாள்களில், மணிக்கு 40 முதல் 55 கி.மீ பலத்த காற்று வீசக் கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.