
Chance of heavy rain in the Nilgiris in the next 24 hours
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 (11.09.2020 மணி நேரத்திற்கு) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
தேவலா 21 செ.மீ மழையும், நாமக்கல் 13 செ.மீ மழையும், பென்னாகரம், அகரம் சிகூர் தலா 8 செ.மீ மழையும், உளுந்தூர்பேட்டை, கலசப்பாக்கம், சேந்தமங்கலம் 7 செ.மீ மழையும், வேப்பந்தட்டை, சுலங்குறிச்சி, தேன்கனிக்கோட்டை, குடியாத்தம் தலா 6 செ.மீ மழையும் பெய்துள்ளது.