சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து சேவை நாடு முழுவதும் படிப்படிகயாக மீண்டும் துவங்க ஆரம்பித்துள்ளது.
இதில், மத்திய அரசு அனுமதி அளித்ததன்படி, தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் தற்போது இயக்க்கப்பட்டு வருகின்றன. மேலும் 3 சிறப்பு ரயில்கள் வரும் 12 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்,
தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது. பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை' என்று பதிவிட்டுள்ளார்.