சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொன்நகர் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தைப் பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பொன் நகர்ப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் வசித்து வரும் பகுதியாகும்.
காரைக்குடியிலிருந்து பொன்னகர் செல்லும் சாலை மிகவும் சீர்குலைந்த நிலையில் உள்ளதால் அப்பகுதிக்குச் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையை சீரமைக்கக் கோரினர்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரெங்கராஜ் பொதுமக்களிடையே பேசி சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.