இணையவழி வகுப்புகளுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்

இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றம்.


சென்னை: இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரத்தை சேர்ந்த சரண்யா, விமல் மோகன் ஆகியோர் இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் எஸ்.பிரபாகரன், ஜெ.ரவீந்திரன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக மாணவர்களிடம் தொழில்நுட்பம் சார்ந்த கல்விமுறை திணிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களில் எந்தத் தவறும் இல்லை; அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால்தான் தவறு ஏற்படுகிறது.

இணையவழி வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகள், இணையவழி வகுப்புகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்தை அனைத்துப் பள்ளிகளும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். வகுப்புகளின் விவரங்களை பெற்றோர்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வழியாகவும், பள்ளிகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்தும் பள்ளி நிர்வாகங்கள் தெரியப்படுத்தவேண்டும்.

இணையவழி வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் கூட்டத்தை, மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.

இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும்போது இணையதள வசதிகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சியை விடியோ படம் பிடித்து, அதை சமுதாயக் கூடத்தில் வைத்து மாணவர்களுக்கு திரையிட முடியுமா என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த முடியுமா? ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா? என்பதை எல்லாம் பள்ளி நிர்வாகங்கள் ஆராய வேண்டும்.

மாணவர்கள் வருகைப் பதிவேடு, தேர்வுகள் ஆகியவை குறித்து அரசு உருவாக்கியுள்ள விதிமுறைகளையும், மழலையர் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளையும் ஒவ்வொரு பள்ளியும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை தமிழில் மொழிபெயர்த்து பெற்றோர்களுக்கு வழங்கவேண்டும். இணையவழி வகுப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதுதொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்களை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸôர் விரைவாக அறிவிக்க வேண்டும்.

இணையவழி வகுப்புகளின்போது ஏதாவது ஆபாச இணையதளம் குறுக்கிடுவதாக புகார்கள் வந்தால், அதன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களுக்குள் புலன் விசாரணையை போலீஸôர் முடிக்கவேண்டும். இந்த உத்தரவு தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பொருந்தும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com