தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ நந்த கோபால சுவாமி தம்புரான் மாட்டுத்தொழு, ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணன் திருக்கோவில்களில் வியாழக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவில் 48 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பொது முடக்கம் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. கோவில் முக்கிய நிர்வாகிகள் தம்புரான் மாட்டுத்தொழுவிலுள்ள கம்பத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஒக்கலிகர் சமுதாயத்தினர் செய்தனர்.
இதேபோல் கம்பம், உத்தமபுரத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
முன்னதாக கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள உற்சவரை அழைக்க பொது முடக்கம் காரணமாக கூட்டம் கூட தடைகள் இருப்பதால் கோவில் வளாகத்தில் யாதவர் சமுதாயம் சார்பாக பொங்கல் மட்டும் வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்த உற்சவருக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்னர் வேணு கோபால கிருஷ்ணன் கோவில் மடாலயத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். சிறப்புப் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.
சமூக இடைவெளியுடன் ஆண் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமுடக்கம் காரணமாக உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஏற்பாடுகளை யாதவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.