பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில் ஆளும் அதிமுக தலைவர்களின் உதவியில்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது என்று திமுக மக்களவை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், கரூர் போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பல்வேறு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு விவசாயிகள் தானாக பதிவு செய்துகொள்ளும் முறையை அறிவித்ததுதான் முறைகேட்டுக்கு காரணம் என முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்க பதிவில், பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் ரூ.110 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமடக்க காலத்தில்கான் நடைபெற்றுள்ளன.
வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பாஜக இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா 5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது.
மேலும், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது.
பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை என்று கனிமொழி கூறியுள்ளார்.