தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பலகோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது தொடர்பாக 42 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய தொன்மையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட தியாகராஜர் சுவாமி சிலை, இரு அம்பாள் சிலைகள் ஆகியவை கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு திருட்டு போனது.
இந்நிலையில், கோயிலின் செயல் அலுவலர் அசோக்குமார் புதன்கிழமை கொடுத்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர்அபய்குமார் சிங் உத்தரவுப்படி, காவல் துறைத் தலைவர் அன்பு வழிகாட்டுதலின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருட்டு போன சிலைகளை கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.