திருமங்கலம் அருகே வேன் கண்டெய்னர் லாரி மீது வியாழக்கிழமை அதிகாலை மோதியதில் காய்கறி வியாபாரிகளான தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உசிலம்பட்டி தாலுகா சடச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(55). இவரது மகன் தவமணி(21). இருவரும் காய்கறி வியாபாரிகள். இவர்கள் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்றில் உசிலம்பட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை சென்றனர். வேன் மதுரை - நெல்லை நான்குவழிச் சாலை பகுதியில் ராயபாளையம் விலக்கு அருகே சென்றபோது திருப்பூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.
கண்டைனர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதிய வேன்
இதில், வேனின் முன்பகுதி முழுவதும் சேதமாகி அதில் பயணம் செய்த பால்பாண்டி மற்றும் அவரது மகன் தவமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.