நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரி, சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலை இரயில் பாதையில் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் மற்றும் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரயில் பாதையில் விழுந்து கிடக்கும் சரக்கு லாரி.
கோவை காரமடை பகுதியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நீலகிரி மாவட்டம் வந்து கொண்டிருந்த லாரியை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார், குன்னூர் அருகே வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய லாரி அங்கு இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், கை, கால்களில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் சரவணன் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
விபத்துக்குள்ளான லாரி சற்று தவறி அருகிலுள்ள 200 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றில் விழுந்திருந்தால் பெரும் விபத்து நேர்ந்திருக்கக் கூடும்.
விபத்து குறித்து ரயில்வே காவல் துறையினர் மற்றும் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.