தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள இரைச்சல் பாலத்தில் நீர்வரத்து நின்றது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தேக்கடியில் உள்ள தலை மதகு பகுதியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், குமுளி வனப்பகுதி வழியாக 4 இரும்பு குழாய்கள் மூலம் லோயர் கேம்ப் வந்தடைந்து, மின்சாரம் உற்பத்தி நடைபெறுகிறது.
ஒவ்வொரு குழாய்க்கும் தலா 400 கன அடி வீதம் 1,600 கன அடி தண்ணீர் குழாய் வழியாகச் செல்லும். அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைப் பொருத்து லோயர்கேம்ப் மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நடைபெறும்.
தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த செப். 6 ல் இருந்து சனிக்கிழமை வரை வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் லோயர் கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளில் தலா 41, 42, 42, 32 என்ற அளவில் மொத்தம் 157 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதற்கிடையில் டேம் அணை அருகிலிருந்து, இரச்சல் பாலம் வழியாக, சுமார் 200 கனஅடி வரை தண்ணீர் வெளியேறி வந்தது. தற்போது அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைந்துவிட்டதால் இரச்சல் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது.
அணை நிலவரம்
சனிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 125.85 அடியாக இருந்தது, அணையில் நீர் இருப்பு 3,802 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 962 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,200 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப் பகுதியில் 16.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 8.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.