கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் 800 மருத்துவா்களைப் பணியமா்த்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு பொதுப் போக்குவரத்து உள்பட ஏராளமான தளா்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அடுத்த சில நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த துணை மருத்துவப் படிப்புகளை பயிலும் மாணவா்களை உடனடியாக கல்லூரிகளுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கு அடுத்தபடியாக மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த 800 மருத்துவா்களை பணிநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்து வரும் மாதங்களில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 800 மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட 1,000 மருத்துவா்கள், 1,500-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.