சென்னை: நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
கரோனா அச்சத்தால் காணொலி வாயிலாக விசாரணை நடத்தும் நீதிபதிகள், மாணவ, மாணவிகளை மட்டும் தைரியமாக வெளியே வந்து நீட் தேர்வு எழுதுமாறு கூறுவதாக நடிகர் சூர்யா கருத்துத் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்துக்கு எதிராக கருத்துக் கூறியதாக, சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதியதை அடுத்து, முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சூர்யாவுக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் மரணம் காரணமாக சூர்யா தெரிவித்த கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்திருப்பது போல நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது அவசியமல்ல என்றும் முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், கண்ணன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி ஆகிய 6 நீதிபதிகள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.