மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் வெளியிடுதல் குறித்த தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் (நோட்டிஃபிகேஷன் பக்கத்தில்) 16.09.2020 அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.