பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே திங்கள்கிழமை இரவு அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
ஆலத்தூர்வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் மணிவண்ணன் (45) பணியாற்றி வருகிறார்.
இவருக்கு உதவியாளராக பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்த பிச்சை மகன் சுரேஷ் (40) என்பவர் உள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு மதுபானம் விற்பனை செய்த பணம் ரூ.3.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு மணிவண்ணனும், சுரேஷும் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.