சென்னை: சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை, கரோனா நோய்த் தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் இந்த உத்தரவை மீறி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தவிர பிற மருத்துவமனைகளிலும், பல மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் கரோனா பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஏராளமான மருத்துவர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் மருத்துவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக வரும் செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.