மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் க. ஜான்மோசஸ், உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். அரசியல், பொதுப்பணி, இலக்கியம் எனப் பல தளங்களில் பணியாற்றியவர். பாரதி தேசியப் பேரவை என்ற அமைப்பின் மூலம் இலக்கியப் பணிகளையும், அறப் பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.
சாதாரண ஏழை எளிய மக்களுக்காகவும், உள்ளூர் பிரச்னைகள் முதல் சர்வதேச பிரச்னைகள் வரை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். மதுரை மக்களால் கரிமேடு காமராஜர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர் ஜான் மோசஸ்.