தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் மான்கொம்பு, யானைத் தந்தம், புலி நகம், மயில்தோகை வைத்திருந்த சித்த மருத்துவரை கூடலூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருவில் வசிப்பவர் சண்முகம் மகன் நந்தகோபால் (42). இவர் சித்த மருத்துவராக உள்ளார்.
இவரது வீட்டில், மான்கொம்பு, யானை தந்தம் இருப்பதாகக் கூடலூர் வனச்சரகர் பெ. அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வனத்துறை, மற்றும் காவல்துறையினருடன் திங்கள்கிழமை இரவு நந்தகோபால் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அவர் வீட்டில் காய்கறி பையினுல் மான் கொம்பு இரண்டு ஜோடி, யானைத்தந்தம் சிறியது, புலி நகம் 2 மற்றும் மயில் தோகை இரண்டு மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மான்கொம்பு, யானை தந்தம், புலி நகத்தைக் கைப்பற்றிய கம்பம் கிழக்கு ரேஞ்சர் அருண்குமார், நந்தகோபாலை கைது செய்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.