சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4-ஆக குறைக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
பல்வேறு தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழ்ப் பாட வேளைக் குறைப்பு நடவடிக்கையை துணைவேந்தர் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். வழக்கம் போல 6 தமிழ்ப் பாடவேளை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4-ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகம், கடந்த வாரம் வெளியிட்ட 2020-21-ஆம் ஆண்டு கல்வியாண்டு இளநிலை படிப்புகளுக்கான உத்தேசப் பாடத்திட்டத்தில்தான் இந்தத் தகவல் இடம் பெற்றிருந்தது.
ஆங்கிலப் பாடத்தில் மாணவா்களின் தோ்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தோ்வுகள் மற்றும் நோ்காணல்களில் பங்கேற்கும் மாணவா்கள் ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறுவதாலும் மாணவா்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காக தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழ்ப் பாட வேளை குறைப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.