தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று, சட்டப் பேரவையில், மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்கட்சி துணை தலைவரின் கேள்விக்கு அளித்த விளக்கம்: உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. நமக்கு வழங்கப்பட வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது எதிர்கட்சி துணை தலைவருக்கு நன்றாகத் தெரியும்.
இது குறித்து மூன்று, நான்கு முறை மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கொண்டு வந்தார்கள். நாம் கடுமையான ஆட்சேபணை செய்த நிலையில், அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்திலே இருக்கிறது. ஆகவே, அவர்கள் எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக பேரவைத் தலைவர் வாயிலாக எதிர்கட்சி துணை தலைவருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.