கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (செப். 14) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பூஜ்ய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதன்பின்னர் சட்டப்பேரவையில் பேசிய அவர்,
கரோனாவை கையாளுவதில் அரசு தோல்விடையடைந்துவிட்டது. இறப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு இன்னமும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. கரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மாநிலத்தின் பொருளாதாரம் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடு குறித்தும் தெரியவில்லை.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினேன். ஆனால், அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை.
மேலும், கரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பு, செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு சட்டப்பேரவையில் வைக்க வேண்டும்' என்று பேசினார். மேலும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றார்.