திண்டுக்கல் அருகே மதுபோதையில் நண்பனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் என்.எஸ்.நகர் அடுத்துள்ள சாலையூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் மணிகண்டன்(24). அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அஜீத்(25). நண்பர்களான மணிகண்டன் மற்றும் அஜீத் ஆகிய இவரும், சாலையூர் பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் ஓடப்பட்டி பிரிவு அருகே மணிகண்டன், அஜீத் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது நண்பர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அஜீத், மதுப்பாட்டிலை உடைத்து மணிகண்டன் கழுத்தில் குத்தியுள்ளார்.
போதையில் இருந்த மணிகண்டன் பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே நண்பனை கொலை செய்தது தெரியாமல் போதையில் தடுமாறிக் கொண்டிருந்த அஜீத்தை அப்பகுதியினர் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்விடத்திற்கு சென்ற திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜீத்தை கைது செய்த காவல்துறை கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.