புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயலில் சேதமடைந்த வீட்டைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சின்னராஜா (45). பெயிண்டிங் தொழிலாளியான இவரது வீடு கஜா புயலில் சேதமடைந்துள்ளது. வீட்டைச் சீரமைத்து தர அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால், வீட்டை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தி தோப்புக்கொல்லை அருகே சுமார் 100 அடி உயரமுள்ள செல்லிடப்பேசி உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்து அங்குச் சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி மற்றும் போலீஸார் சின்னராஜாவிடம் 3 மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, செல்லிடப்பேசி கோபுரத்திலிருந்து சின்னராஜா கீழே இறங்கியுள்ளார்.