தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் இடி தாக்கியதில் உயிரிழந்தனர்.
ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி விவசாயி. இவரது நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.
இதனையடுத்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் நிலத்தின் அருகில் உள்ள மரங்களின் கீழ் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே நின்றிருந்த கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த பெரியவள்ளி, போதுமணி என்ற இரண்டு பெண்கள் இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த க.விலக்கு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உயிரிழந்த 2 பெண்களின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.