சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதிக் குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் தனபால் ஒத்தி வைத்தார்.
கரோனா இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது.
முதல் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 நாள் அவை நடவடிக்கைகளில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்பட 24 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இறுதிநாளான புதன்கிழமை பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து அவையை பேரவைத் தலைவர் தனபால் ஒத்திவைத்தார்.