தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19,860- ஆக அதிகரித்துள்ளது. 
 கோவை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, பொது சுகாதாரத் துறை உயரதிகாரிகள் சென்னையிலிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று நேரடியாக களப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 61.33 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 9 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோயின் தீவிரத்தைப் பொருத்து அவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 983 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 549 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், திருவள்ளூரில் 282 பேரும், சேலத்தில் 280 பேரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மற்றொரு புறம் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 88 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 64,668 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை மட்டும் 5,768 பேர் நலமடைந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 8,559-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com