சென்னை: தமிழக அரசுக்கு கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் குறைவான வரி மதிப்பீட்டு முறைகளால் ரூ.4,432 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய தணிக்கைத் துறை கூறியுள்ளது.
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2017-18-ஆம் ஆண்டுக்கான பதிவுக் கட்டணம், வணிக வரி, வாகனங்கள் மீதான வரி, முத்திரைத் தீர்வை, சுரங்கம், கனிமங்கள் மற்றும் நில வருவாய் ஆகியவை பற்றிய பதிவுகள் கணக்கிடப்பட்டன.
அதில், குறைவான வரி மதிப்பீடுகள், குறைவான வரி விதித்தல் உள்ளிட்ட காரணிகளால் அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 432.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி மற்றும் ஆடம்பர வரிகளின் கீழ் 93 ஆயிரத்து 857 மதிப்பீடுகள், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி ஆய்வில் முடிவு செய்யப்படாமல் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.